கி.ரா- 95 | கி ரா என்றொரு கீதாரி - தொகுப்பு : கழனியூரன்



நானிலமாக இருந்த தமிழ் நிலம் பின்வந்த இலக்கியங்களினால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு விலங்குகள், பறவைகள்.
சரி, இந்த ஐந்தில் கரிசல் எங்கே வருகிறது. காணவே காணோம். கரிசல் மட்டுமில்லை உட்கார்ந்து தடவினால் இன்னும் பல புதிய நிலத் திணைகள் அண்மைய கால வரலாற்றில் நம்மால் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதை எல்லாம் நாம் கண்ணைமூடிக்கொண்டு கடந்து போய்விட முடியாது. அங்கே ஒரு தனித்த வாழ்க்கை இருக்கிறது. வேறெங்கும் நிலவாத தட்பவெட்பம் சுடுகிறது. மழைக்குப் பிறகு வண்டிமை போல களிம்பாக வழுக்கும் தனித்த நிலம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே ஒரு வாய்மொழி நீண்டு நிலைத்திருக்கிறது.
இந்த வாய்மொழிகளை, ஆவணங்களை, நிலக்காட்சிகளை, வாழ்க்கையை, மனிதர்களை தன் எழுத்தில் பதிந்தவர் கி.ராஜநாராயணன். அவர் தெற்கத்தி கரிசல் நிலத்தில் செய்த எழுத்து வேலைகளில் பாதியை உலகின் வேறெந்த திசையில் வாழ்கிற அல்லது வாழ்ந்த வேறெந்த படைப்பாளியாவது தொடர்ந்து தன் தொன்னூற்றைந்து வயது வரை செய்து வந்தார் என்றால் அவருக்கான புகழ்வெளிச்சத்தின் தராதரமே வேறு.
கி.ரா இத்தகைய பொதுப் பாராட்டுகளுக்காக இயங்குகிறவரில்லை. அவரை இயக்கும் ஆன்மா அவருடைய எழுத்து. அவர் தூக்கிச் சுமக்கும் நியாபகத்தின் ஒருபக்கம் தான் கரிசலுடையது. ஒட்டுமொத்த இந்திய கிராமங்களின் நினைவு வலை அவர். கூகுளில் நீங்கள் தரவிறக்க முடியாத பல தரவுகளை அவர் எழுத்தில் தந்திருக்கிறார்.
அவரது 95ஆண்டு பயணத்தை மனத்தில் வைத்து, தமிழ் இலக்கியத்தில் தங்களை அர்பணித்துச் செயல்படும் எழுத்தாளுமைகள், கி.ரா அன்பர்கள், வாசகர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு விழா எடுத்ததை அறிவோம். அதிலும் குறிப்பாக கி.ராவின் அத்யந்த சீடனாகவிருந்த எழுத்தாளர் கழனியூரன், கி.ரா பற்றி இத்தனை ஆண்டுகளில் பலரும் எழுதின முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்துக் கொண்டுவரச் செய்த நூல் தான் “கி.ரா என்றொரு கீதாரி”
இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகபூபதி, தேவ மைந்தன், பாவண்ணன், அர.சீனிவாசன், பிரபஞ்சமித்ரன், கி.ரா.குறிஞ்சிவேலன், இராச.திருமாவளவன், சே.திருநாவுக்கரசு, தேவி கிரிசன், ஆகாசம்பட்டு ஷேசாலம், திரைப்பட நடிகர். சிவக்குமார். திரைப்பட நடிகர். சார்லி, தெலுங்கு எழுத்தாளர். ருத்ர துளசிதாஸ், நண்பர். புதுவை. இளவேனில், கார்த்திக் புகழேந்தி, மற்றும் கழனியூரன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
கழனியூரன் சொல்வதே போல், இவை இந்நூலுக்காகக் கேட்டு வாங்கித் தொகுத்த கட்டுரைகள் அல்ல. அவர்களாகவே பல்வேறு காலக்கட்டங்களில் கி.ரா குறித்து எழுதின கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து கொண்டு வந்த தொகுப்பு. தள்ளிப் பழுத்ததைவிட தானாய் பழுக்கும் பழங்களுக்கு ருசி அதிகம் என்பார்கள். ஆகவே தன்பழமாக இந்த கிரா என்ற கீதாரி நூல் இருக்கும்.

-ஜீவா படைப்பகம்.
19-09-2017
நூல் இரு இயல்களாக வெளியிடப்பட்டுள்ளது.
இரு இயல்களின் விலை: 300/- (160+140)

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil