மரக்கா - முத்துராசா குமார்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பாக தமிழ் மொழிக்கூடம் Srinivas Parthasarathy அவர்கள், சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு மேற்காக களிகுன்றம் பகுதியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு வளாகத்திலே அமைந்திருந்த தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகத்தையும் ஒருபார்வை பார்க்கலாமென்று உள்ளே நுழைந்திருந்தேன்.

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒரு நல்ல தமிழ் காரியம் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டே உள்நுழைந்தாலும், அருங்காட்சியகத்தின் உள்ளே ரம்பர் மரங்களைக் கடைந்து, மெஷின் கட்டிங்கில் செய்த சிலைகளையும், மெழுகுக் களிமண் பொம்மைகளையும், கேரள பாணியிலான வடிவச் சிற்பங்களையும் காட்டி தமிழர் பண்பாட்டுக் கலைப் பொருட்கள் என்று ஏமாற்றியிருந்தார்கள்.

சரி போகிறது என்று சுற்றிவந்ததில், ஓர் அறையில் நான்கு பழைய மொடாக்கள், காவி பூசின நெற்குதிர்கள், கொஞ்சம் கல் உரல், உலக்கை, பழைய நெல் அளவை மரக்கால்கள், சொளவு என்று கொஞ்சம் தமிழ் நிலத்துக்குத் தொடர்புள்ள பொருட்களும் இருந்தன. கட்டடத்திற்குள்ளே ஒரு குறும் திரையரங்கம் அமைத்து தமிழர் மருத்துவம், நீர் மேலாண்மை இப்படியாக ஐந்து ஆவணப்படங்கள் ஒளிப்பதிவிடுகிறார்கள். அது கொஞ்சம் உருப்படியானது.

கல்லூரித் தோழன், தோழிகளென்று குழுவாக வருகிறவர்கள் தங்கள் செல்போன்களில் அவற்றை பதிவு பண்ணிக்கொண்டிருந்ததையும் கவனித்தேன். எனக்கு மனத்தளவில் பெரிதாக எதிலுமே லயிப்பில்லை. ஒரு சில விஷயங்கள் தவிர. இந்த மாதிரி அருங்காட்சியகம் போன்ற கலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இவர்கள் செட்டாக மாட்டார்கள் என்று தோன்றினாலும் அதன் தலைமை இயக்குநர் என் எண்ணத்துக்கு நேர்மாறானவராக தமிழ் உணர்வோடு, இலக்கிய, மொழிப் பரிச்சயங்களோடு இருந்தார்.

மொத்தமாக வேடிக்கை பார்த்ததில் நெல் அளவைக்குப் பயன்படுத்தும் அந்த மரக்கால்களும் சொளவுகளும் மட்டும் கண்ணுக்குள்ளே நின்றது. பார்த்து எவ்வளவு வருசங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவு. அத்தனைவிதமான அளவைகளையும் எங்கிருந்தோ சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்தமாதிரி நெல்வேடையும், வெள்ளைத் தூசுபடிந்த அழுக்குமாக இருந்தது. பொன் முத்துராசாவின் இந்தக் கவிதையை வாசித்தபோது எனக்கு அந்த மரக்கால் மறுபடியும் கண்முன்னால் வந்துபோகிறது.

மரக்கா

பால்யங்களில் பிடித்த நாரைக்குஞ்சுகள்
குமட்டி கக்கிய மண்புழுக்களின் வயிறுகளில்
எனதுகாட்டின் கறித்திமிரெடுத்த
கரம்பைமண் செழும்ப கிடந்தது

இன்று,
எனது காட்டின் ஒட்டிப்போன
வயிறுக்குள் எட்டிப் பார்க்கையில்
Image result for மரக்கால்ஒரேயொரு கருக்கா நெல்லோடு
ஒரு சுருக்கத்தோல் ஆளு
மரக்காலுக்குள் உட்கார்ந்து கொண்டு
ஏதேதோ பேசி புலம்பிக் கொண்டிருந்தார்

தளும்ப தளும்ப நெல்லளந்த
எனது மரக்காக்களின்
மடியறுந்த வெறுமை இருளும்
கதிர்கள் கொட்டி
இன்று, அழுக்குத்துணிகள்
அடைந்து வைக்கும்
மண் முட்டிகளின் வாசமும்

ஒருசேர தலைக்கேறி சித்தம் கலக்கி
யாரையோ பச்ச பச்சயாய் திட்டிக்கொண்டே
தொலைந்து போன பொட்டல்களம் நோக்கி
ஓட வைக்கின்றன

பொட்டல்களத்தை பார்த்துவிட்டு -நான்
திரும்பும் காலத்தை கணித்துச்
சொல்ல முடியாது

பொந்தான பனையோ
பொந்தாகும் மொட்டைத் தென்னையோ
பாகம் பிரிக்கப்பட்ட நமது ஆத்தா
அப்பன் வாழ்ந்த பூர்வீக வீட்டின்
நவீன கதவுகள் ஆன பின்பு

மரங்கொத்தியும்
கிளியும் தனது குஞ்சுகளோடு
வாசல் வந்து கதவுகொத்தி
கத்தினால் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு,
வாடிக்கை பொறியாளனைக் கூப்பிட்டு
தானியங்கள் செய்யச் சொல்!

-முத்துராசா குமார்


Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil