வெயிலில் நனையாத கிராமங்கள்



சின்னவயசுல அக்காவுக்கு ஏகப்பட்ட தோழிகள். அந்த வாயாடிக் கூட்டத்துக்கு கேங்க் லீடர்ல ஒருத்தியா அக்கா இருந்திருக்கனும். வீடும் வைக்கோல் போர் எழும்பி நிற்கும்பின்கட்டும், தொழுவமும்   எப்பவும் ஜே ஜேன்னு நிரம்பி வழியும், பத்தாததுக்கு தொன்னூறு வயசுக் கிளவியா ஆச்சியும் வீட்டில் இருக்க, ஊரில் உள்ள கிழங்கட்டைகள் எல்லாம் அந்த முள்ளு மரத்து நிழல்ல கூடி உட்கார்ந்து  கதைகதையா பேசுவாங்க.

அந்தப் பிள்ளைகளுக்கு வால் ஒன்னுதான் குறை.. பூசணிப்பூ பறிக்க , குன்னிமுத்து பிறக்கி எடுக்க, புளியம்பழம் உலுக்க, நெல்லிக்கா, கொடுக்காபுளி, மாங்கா, நவ்வாப்பழம், கோவப்பழம், எளந்தைப்பழம், மருதாணிச்செடி, காக்கா முள்ளு, கள்ளிப்பூவு,  எருக்கம்பூவு, வாகைப் பூவு, அரச இலைன்னு ஒன்னு விடாம, ஊருல முளைக்குற எல்லாப் எல்லாமே அவங்களுக்கு தேவையான பொருள்தான்.

எல்லாத்தையும் பறிச்சுக்கொடுக்கவும், காவல் இருக்கும் தோட்டத்தில் களவாடவும் அவங்களுக்கு   ஒரு சம்பளமில்லாத அடிமையா நானும் ஒருகாலத்தில் இருந்தேன். எங்க போனாலும் பட்டத்து இளவரசிங்களுக்கு காவல் நாமதான். அதுவும் சோனிப்பையல்வளுக்கு அக்காவா சுகந்தி மாதிரி பிள்ளைங்க இருந்தா, தன்னோட தம்பிங்கள விட நம்ம மேல அம்புட்டு ஒரு இது.

படம் வரைஞ்சு கொடுக்குறது, பாண்டிக்கு சப்பைக்கல்லாப் பார்த்து தேடிக்கொடுக்குறது, சிரட்டைக்கொண்டைக்கு தேங்காச்சிரட்டையை பதமா சுரண்டி பாங்கா துளைபோட்டுக் குடுக்குறது, இவ்வளவு ஏன் வேலிக்காத்தான் முள்ளு காலைத் தச்சுருச்சுன்னா அதை ஊக்குவச்சி எடுத்துவிடுறது வரைக்கும் நாள் பூராம் நமக்கு வேலை இருக்கும்.   அவுங்களோட வேலை வாங்குற பட்டியலுக்கு ஓய்வே இருந்ததில்ல.

அப்பேர்பட்ட புள்ளைங்க வாய்வலிக்கப் பேசி ஒன்னுமண்ணா சுத்தி,   நம்மைக் கூடவே வச்சுக்கிட்டு வயிறு வலிக்க ஒருநாள்  உக்காரும் போது ஊரே சேர்ந்து நம்மள கழட்டி விட்டுரும். பருவத்தை புரிஞ்சுக்காத மனசு தென்னந்தட்டி போட்ட மச்சிவீட்டையே சுத்திச்சுத்தி வரும்.



என்னதான் நாம  சுத்திச் சுத்தி வந்தாலும் அந்தப்பிள்ளைங்க வீடுகளை விட்டு வெளியே வராது. ஆனா அவங்க அம்மைமார்ங்க எல்லாம் வக்கைனையா, “மருமவனே அந்த தொர்ராசு கடையில போயி ரெண்டுரூவாய்க்கு சீனி வாங்கி வாய்யா” ன்னு மறுவட்டமா வேலை வாங்கும். அப்படிக் கடைக்குப் போய் வரும் போது ரோட்டில் கிடக்கும் பில்டரு, பனாமா, சார்மினார் சிகரெட்டு அட்டைங்களையா பொறுக்கி எடுத்து வந்து கொடுத்தா... ரெவ்வெண்டு அட்டையில ரஜினி படம் பேரா எழுதி, கை நிறைய சேர்த்து கழக்கி, வருசை வச்சு அந்தப் புள்ளைங்க விளையாடும்.

அதே சார்மினார் அட்டைக்கு பத்தாயிரம் பாய்ண்டு வட்டக்கல் விட்டு விளையாண்டா! ஆனா அது பயலுங்க கூட ஆடுற விளையாட்டு. நமக்கு பத்தாயிரம் பாய்ண்டா முக்கியம் பவளக்கொடி சிரிப்பா பாருங்க சிரிப்பு அதுதான் முக்கியம்.

இந்தக்கிழவிங்க தான் நமக்கு எப்பவும் எமன்.  “எங்க ஆச்சி வருது ஓடீருன்னு” தங்கரதி சிக்னல் குடுத்ததுமே அவ கையில பனங்கிழங்கை திணிச்சுட்டு ஓடுற ஓட்டத்துக்கு அந்த கிளவியும்லா கூட விரட்டும். மறுநாள் நுங்கு வண்டி ஓட்டிக்கிட்டு அதே பிள்ளை வீட்டை வேவு பார்க்கப் போனா, பிடிச்சு மோளத்தெரியாத பயக்கூடல்லாம் என்ன வெளாட்டுன்னு மானத்த வாங்கிடும்.

ஆனா, அதே கிழவிக்கு பல்லாங்குழி வெளையாட நாமதான் குழிதோண்டி கொடுக்கனும். மொத்த ஆண் சமூகமும் இப்படி சேவை செஞ்சே அழிஞ்சிருக்குன்னு அப்ப எனக்கும் தெரியாமப் போச்சி பார்த்தீங்களா!

நல்ல காசுபணம் உள்ளவிங்க வீட்டுல பல்லாங்குழிப்பெட்டி  பெட்டி மீன்மாதி பித்தாளைல இரட்டையாய் மடிச்சு வைச்சிருப்பாங்க. உலுக்கி எடுத்த புளியம்பழத்திலிருந்து புளியங்கொட்டைய எடுத்து சுத்தம்பண்ணி விளையாடுவாங்க.  பல்லுபோன கிளவிக்கு பித்தாளையில பல்லாங்குழி கேக்குதோன்னு எடுப்பெடுத்த யாரும் கேட்டுடுவாளுவன்னு மண்ணுலயே குழிவெட்டி ஆடுவாங்க.

இப்போதானே வீடெல்லாம் அங்குலம் இடம்கூட விடாம முழுக்க சிமெண்டுதரை போட்டு பூசி வச்சிருக்காங்க. அப்போ கன்னுக்குட்டி கட்டும் இடத்தில் கால் நீட்டி கிளவிகளும் குமரிப்பிள்ளைகளும் உட்கார்ந்து, எதிர் எதிரா ஆறு ஓரத்தில் நடுநாயகமா ரெண்டும்ன்னு பதினாலு குழி பறிச்சு, 12 குழி மட்டும் குழிக்கு ஆறு (ஆறுதானே? ) புளியமுத்து நிரப்பி பல்லாங்குழி ஆடுவாங்க... குழிதோண்டின நமக்கு கூட்டுல வேடிக்கை பார்க்கும் வேலை மட்டும் தான்.

எதிராளி சேமிச்சதை அள்ளி எடுத்து தன் குழிகளை நிரப்பிக்கும் சூட்சமம் எல்லாம் கணக்குப்பாடம். சேமிக்க செலவழிக்கன்னு ,  குடும்பத்தைக் கச்சிதமா கொண்டுபோக அந்த வயசிலே பொட்டப்பிள்ளைங்களுக்கு சூசகமா சொல்லிக்கொடுக்கும் விளையாட்டு தான் பல்லாங்குழி. பயலுங்களுக்கு இப்படிச் சொல்லிக் கொடுக்க அதிகம் வழி இல்லாம போயிருக்கு அதனால தான் கரடுமுரடாவே வாழ்ந்துடுறானுங்க.

ஒவ்வொரு விளையாட்டுக்குள்ளயும் வித்தைல்லா சொல்லிக்கொடுத்துருக்குங்க இந்த கிளவிங்க பாண்டி ஆடினா தசை இறுகுது. தட்டமாலை உடம்புல காந்த அதிர்வுகள ஏற்படுத்துது.  சீனிக்கல் விளையாட்டுல எத்தன நுணுக்கமா கல்லை அள்ளி காத்துல எறிஞ்சு மொழில பிடிச்சு, மறுகைல மடக்கி ஆத்தீ...

பொட்டப்பிள்ளைங்க மஞ்சள் அரைச்சு குளிச்ச கையில அப்படியே கொதிக்குற பானைய தூக்கமுடியும்ன்னு எங்க ஆச்சி சொல்லிக் குடுக்கும் போது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு அக்காவுக்கு தெரிஞ்சிருக்குமான்னு தெரில. ஆனா   மஞ்சள் வெப்பத்த கடத்தாதுன்னு இன்னைக்கு அறிவியல் கண்டுபிடிச்சிருச்சாம். அப்போ   அந்த கிளவிக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பாங்க...

இந்த விளையாட்டுங்கல்லாம் மெல்ல அழிஞ்சு போச்சுன்னு சொல்ல முடியாது. இன்னைக்கும் கிராமங்கள்ள பச்சக்குதிரையில எக்கிக் குதிச்சு விளையாடுற பசங்க இருக்கத்தான் செய்யுறான். அவன் கையில கிரிக்கெட் பேட்டே வந்தாலும் அவன் பந்து சைக்கிள் ட்யூபை வெட்டி ரப்பர் பேண்டாக்கி இறுக்கிச் செஞ்ச விஞ்ஞானம் தான்.

விளையாட்டுங்க அழிஞ்சு போனது நகரத்தில் தான். ஆளாளுக்கு ஆண்ட்ராய்ட் வச்சிருக்காங்க. பார்ம் வில்லேன்றாங்க, ஆங்க்ரி பேர்ட்ன்றாங்க, சப்வே சபர்ன்றாங்க,  ஏம்மா தாயி பார்ம் வில்லேல உருளக்கிழங்கு போட்டேன்றீங்களே உருளக்கிழங்கு வெதை எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?  சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன் கோவிச்சுக்கிடாதீங்க..

அதென்னம்மோ ஒரே மாதிரி இருக்கும் மூனு மிட்டாயை ஒன்னு சேர்த்து உடைக்கச் சொல்றாங்களாமே. ஒன்னா இருக்குறத ஒடைச்சா குடும்பம் எப்படிம்மா உருப்படும்.  அதான் எல்லா சீரியல்லயும் மருமகளுக்கும், நாத்தனாருக்கும் , மாமியாருக்கும் ஆகமாட்டுக்கு போல

- பு.கா

12-04-2015.




Comments

  1. சிறுவயது நினைவுகள் அன்றைய நிகழ்வுகளை அழகாகச் சொல்கிறது, ரசித்து வாசித்தேன்.
    /மஞ்சள் வெப்பத்த கடத்தாதுன்னு இன்னைக்கு அறிவியல் கண்டுபிடிச்சிருச்சாம்.// ஓ அப்படியா? எவ்ளோ தெரிஞ்சு வச்சுருந்துருக்காங்க நம் முன்னோர்..அவை அறியப்படாமல் மறைவதும் வெளிநாட்டினர் patent வாங்குவதும் வருத்தம்தான்.

    கடைசியில் கேட்டீங்க பாருங்க, ஒரு கேள்வி! நச்! உடைத்தும் சுட்டும் இடித்தும் விளையாடும் விளையாட்டுகளைப் பார்த்தாலே...

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் கார்த்திக்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil